வேலூர் மக்களவை தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது திமுகவினர் அராஜகம்

வேலூர் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் போது விதிமுறைகளை மீறி செயல்பட்ட திமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தபோது திமுகவினர், விதிமுறைகளை மீறி கூட்டமாக வந்திருந்தனர். அவர்களுடன் வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர்களும் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் ஒரே நேரத்தில் அராஜகமாக நுழைய முயன்றதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினரின் அறிவுறுத்தலையும் மீறி தேர்தல் விதிமுறையை கடைபிடிக்காமல், ஆட்சியர் அலுவலகத்திற்குள் 27 பேர் சென்றனர். பின்னர் ஆட்சியரின் அறை அருகே உள்ளே நுழைய முயன்ற துரைமுருகனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் துரைமுருகன் ஆவேசப்பட்டு கோபத்தில் கத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 4 பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது.

Exit mobile version