உயர் நீதிமன்றத்தில் அளித்த பிரமாண பத்திர உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டு, கரூரில் மீண்டும் பிளக்ஸ் பேனர் கலாசாரத்தை தி.மு.க.வினர் தொடங்கியுள்ளனர்.
பொது இடங்களில், பேனர் வைக்கமாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, அரசியல் கட்சியினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையேற்று அரசியல் கட்சிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தன.
இந்நிலையில், ஆறு மாதங்களாக காணாமல் போயிருந்த பேனர் கலாசாரத்தை, கரூரில் தி.மு.க.வினர் மீண்டும் தொடங்கியுள்ளனர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம் கவுரிபுரத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தை சுற்றியும், பொது இடங்களிலும், தடையை மீறி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தையும் மறந்து தி.மு.க.வினர் பேனர்கள் வைத்துள்ளதால், பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.