மாணவர்களை ஏமாற்றுவதை நிறுத்துவாரா ஸ்டாலின்?

தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என்று கூறிய விடியல் அரசு, இப்போதாவது மாணவர்களை ஏமாற்றுவதை நிறுத்துமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், தி.மு.க. தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பதுதான் என்று கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.  சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீது பேசும்போதுகூட, நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? என்று தான் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் நேரடியாக எந்த பதிலும் தரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.  2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபோது புரட்சித் தலைவி ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற்றதை சுட்டிக்காட்டியுள்ளார்.  நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியன்று சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியபோதும், மத்திய அரசு அதற்கான ஒப்புதலை வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.  திமுக அரசு அமைத்துள்ள நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு, நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை அறிய மட்டும்தானே தவிர,  நீட் தேர்வை ரத்து செய்ய அமைக்கப்பட்டதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். 

உயர்நீதிமன்றம் நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நிலையில்,  திமுக அரசு நீட் தேர்வையே ரத்து செய்துவிட்டதைப்போல, ஸ்டாலின் வானத்திற்கும், பூமிக்கும் குதித்து அறிக்கை வெளியிட்டிருப்பதாக அவர் குறைகூறியுள்ளார்.  தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் நீட்தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும், அதற்கான வழி எங்களுக்கு தெரியும் என்றும் வாய்வீரம் காட்டிய ஸ்டாலின், தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக தன் மீது பழி சுமத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்துள்ளார்.  அரசியல் நாகரிகம் இன்றி முதலமைச்சர் பதவிக்கான தகுதியை உணராமல் அறிக்கை என்ற பெயரில் ஸ்டாலின் நஞ்சை கக்கியிருப்பதாகவும் காட்டமாக கூறியுள்ளார்.  முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பேச்சை நம்பி, நீட் ஒழிந்து விடும் என்று தேர்விற்கு தயாராகாத மாணவர்கள் மத்தியில், 

 நீட் தேர்வு தேதி அறிவிப்பு அவர்களது தலையில் இடியை போல் இறங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  நீட் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் மன உளைச்சல் ஏற்படாமல் இருக்கவே,  நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்ற அரிய விஞ்ஞான கண்டுபிடிப்பை சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய எந்தவிதமான முறையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல்,  தேர்தலுக்காக வாய்ஜாலம் காட்டிவிட்டோமே என்ற நிலையில், தான் பிடித்த முயலுக்கு 3 கால்கள் என பிதற்றிக்கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.  புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் அவர்களின் வழிவந்த நாங்களும் நீதிக்கு தலைவணங்கக்கூடியவர்கள்,

சட்டத்தை மதிப்பவர்கள், எத்தகைய சூழ்நிலை வந்தாலும் மக்கள் நலனுக்காக சட்டப்போராட்டம் நடத்தியவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்றைய திமுக ஆட்சியாளர்கள் நீட் சம்பந்தமாக தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version