பணம் பட்டுவாடா செய்ததை தட்டி கேட்ட நபரை தாக்கிய திமுகவினர்

சேலம் மாநகராட்சி 1வது கோட்டத்தில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை வீடியோ எடுத்த நபர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் 1வது கோட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழரசனின் ஆதரவாளர்கள் ராஜ்குமார், கண்ணன் ஆகியோர் காமிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு இரவு வீடு வீடாக சென்று பணம் விநியோகம் செய்துள்ளனர்.

இதனை, அப்பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவர் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். அப்போது அங்குவந்த தேர்தல் அலுவலர்களை கண்ட திமுகவினர் கலைந்து சென்றநிலையில், இன்று அதிகாலை திமுகவினர் மீண்டும் பணம் பட்டுவாடா செய்துள்ளனர்.

இதை தட்டி கேட்ட கதிர்வேலை திமுகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது அவரது புகாரை போலீசார் வாங்க மறுத்த நிலையில் கதிர்வேல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Exit mobile version