மாவோயிஸ்ட்டுடன் தொடர்பில் இருந்த திமுக பிரமுகர் கைது

சேலத்தில் மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தில் திமுக பிரமுகரை க்யூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் கடையாம்பட்டியைச் சேர்ந்த மாவோயிஸ்ட் மணிவாசகம் கேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். மணிவாசகத்துடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அயோத்தியாப்பட்டினம் திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமாரை க்யூ பிரிவு காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம் இறப்பதற்கு முன் விஜயகுமாரிடம் பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து விஜயகுமாரும் மாவோயிஸ்ட்டாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்வதற்காக அவரது வீட்டிற்கு க்யூ பிரிவு காவல்துறையினர் சென்றனர். விஜயகுமார் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் அவரை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கிச் சென்றனர்.

Exit mobile version