பணப்பட்டுவாடா செய்ய திமுக முயற்சி!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாட செய்ய வந்த திமுகவினரை, அதிமுக தொண்டர்கள் மடக்கிப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சந்தேகப்படும் வகையில் இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த நபரை அதிமுக வினர் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். தி.மு.க.வை சேர்ந்த அந்த நபர், தனது இருசக்கர வாகனத்தில் கட்டுக்கட்டாக பணம் வைத்து இருந்ததும், வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்ய பணத்தை கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகளிடம் ஒப்படைக்க அ.தி.மு.க.வினர் முயன்றனர்.

அப்போது அங்கு வந்த திமுக ஒன்றிய செயலாளர் தலைமையிலான 25-க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனத்தை சோதனை செய்ய விடாமல் அடாவடியில் ஈடுபட்டனர். இரு சக்கர வாகனத்தில் வந்த நபரையும், வாகனத்தில் இருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு திமுகவினர் காரில் தப்பிச் சென்றனர். அதிமுகவினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version