சென்னை தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி பணி ஆய்வாளரை திமுக ஒப்பந்ததாரர் காலணியால் அடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் நகராட்சியில் ஓப்பந்த அடிப்படையில் சாலை பணிகள், பூங்கா பணிகள், நகராட்சி பள்ளிகள், மழைநீர் கால்வாய் பணிகள் என பல்வேறு பணிகளை ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர். இந்த பணிகளில் குறைகள் இருந்தால், அதுகுறித்து நகராட்சிப் பணி ஆய்வாளர்கள் அதிகாரிகளிடம் புகார் அளிப்பது வழக்கம்.
இந்தநிலையில், தாம்பரம் நகராட்சி பொறியாளர் பிரிவு பணி ஆய்வாளர் ருத்ரமூர்த்தி, நகராட்சிப் பகுதிகளில் ஆய்விற்கு சென்றுவிட்டு, அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த தாம்பரம் பெருநகர 23வது வட்ட திமுக துணை செயலாளர் ரகுநாதன், பணி ஆய்வாளர் ருத்ரகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, காலணியால் அடித்துள்ளார். பணி ஆய்வாளர் ருத்ரகுமாரை திமுக ஒப்பந்ததாரர் தாக்கும் காட்சிகள் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.