பிரியாணி கடையில் திமுக பிரமுகர் அட்டகாசம் – தொடரும் திமுகவின் அராஜகங்கங்கள்

சென்னை நுங்கம்பாக்கத்தில், முன்விரோதம் காரணமாக, ஓட்டல் உரிமையாளரை திமுக பிரமுகர் அடியாட்களை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

 

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில், சுலைமான் என்பவர் பிஸ்மி பிரியாணி கடையை கடந்த 15 வருடங்களாக நடத்தி வருகிறார். அதே பகுதியில் திமுக பிரமுகரான அப்துல்ரஹீம் என்பவர், ரஹ்மான் பிரியாணி என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் திமுக பிரமுகர் அப்துல் ரஹீம் தனது பிரியாணி கடையை திறக்கும்போது, பிஸ்மி என்ற பெயரை பயன்படுத்தியதால், ஏற்கனவே 15 வருடங்களாக பிஸ்மி என்ற பெயரில் பிரியாணி கடை நடத்திவரும் சுலைமான் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதில் திமுக பிரமுகர் நடத்தும் பிரியாணி கடைக்கு பிஸ்மி என்ற பெயரை வைக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த திமுக பிரமுகர் அப்துல்ரஹீம், தனது கூட்டாளிகளான ஜாஹீர், அமீர் என்பவர்களுடன் சுலைமானின் கடைக்கு கடந்த 18-ம் தேதி இரவு வந்து, தற்போது திமுக ஆட்சி நடந்து வருவதால், தங்களை எதுவும் செய்ய முடியாது எனக் கூறி, கொலை மிரட்டல் விடுத்ததோடு, அதை தட்டிக் கேட்ட சுலைமானின் நண்பரான அப்ரோஸ் என்பவரை கத்தியால் குத்த முயற்சித்தும், இரும்பு ராடால் அடித்தும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆத்திரம் அடங்காத திமுக பிரமுகரும் அவருடைய நண்பர்களும் கடை உரிமையாளர்கள் வந்த காரை அடித்து நொறுக்கியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நுங்கம்பக்கம் போலீசார், திமுக பிரமுகர் அப்துல் ரஹீம், அவரது நண்பர் ஜாஹீர் ஆகியோரை கைது செய்து, தப்பியோடிய அமீரை தேடி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அராஜக போக்கை கட்டவிழ்த்துவிட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Exit mobile version