கண்டெய்னரில் டீசல் நிரப்பும் போது உடலில் தீ பிடித்த படி ஓடியதால் பரபரப்பு

சென்னை அருகே கன்டெய்னரில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து ஏற்பட்டு, வடமாநில டிரைவர் ஒருவர் உடலில் தீ பிடித்தபடி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் சிங் என்பவர், சென்னையில், தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இன்று பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது கண்டெய்னர் லாரிக்கு டீசல் பிடிப்பதற்காக வந்தார். அப்போது இவருடைய லாரியில் டீசல் நிரப்பிக்கொண்டிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர், டீசல் நிரப்பும் பைப்பை ராஜேஷ்குமார் சிங்கிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். தனது வாகனத்திற்கு அவரே டீசல் நிரப்பிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீயானது ராஜேஷ்குமார் சிங்கின் உடலிலும் பற்றியது. இதையடுத்து அவர் அங்கிருந்து உடலில் தீ பிடித்தபடி ஓடியுள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அவரது உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Exit mobile version