அமைச்சர் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமரியாதை

விழுப்புரத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்க செய்யாமல் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், விழுப்புரத்தில் நடைபெற்றது.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணை சபாநாயகர் பிச்சாண்டி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மை மக்கள் வாழ்வு நலத்துறை அமைச்சர் மஸ்தான் மற்றும் 3 எம்.பிகள், 10 திமுக எம்.எல்.ஏ க்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதுபோன்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒளிக்க செய்யப்படுவது நமது நாட்டின் மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தை பாட அனுமதிக்காமல் கூட்டத்தை நடத்த பி.ஆர்.ஓ விற்கு அமைச்சர்கள் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்காமலேயே நிகழ்ச்சி நடத்தப்பட்டதால், பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழை காப்பதுதான் முதல் கடமை என பெருமையடித்துக்கொள்ளும் திமுகவினர், தற்போது ஆட்சிக்கு வந்ததும், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்திருப்பதன் மூலம், திமுகவின் முகத்திரை கிழிந்துள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Exit mobile version