டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க உத்தரவு

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து இரண்டு வாரத்தில் அறிக்கை அளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தலைமை செயலாளர் சண்முகம் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கினார். அதன்படி, டெங்கு காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வர ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள், ஒன்றியங்கள் என மண்டல வாரியாக குழுக்கள் அமைத்து மாவட்ட நிர்வாகங்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக தற்காலிக பணியாளர்களை நியமித்து கொசு ஒழிப்பு பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களை தூய்மை தூதுவர்களாக நியமிக்க ஆசிரியர்களுக்கு அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து பணிகளையும் மேற்கொண்டு இரண்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version