திறந்த வெளியில் செயல்படும் அரசு நேரடி கொள்முதல் நிலையம் ; நாசமடையும் நெல் மூட்டைகள்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கட்டவாக்கம் கிராமத்தில் திறந்தவெளியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இங்கு, சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வடகிழக்கு பருவ மழை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தும், மாவட்ட நிர்வாகம் போதிய தார்பாய்களைக் கொண்டு நெல்மூட்டைகளை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் நெல் மூட்டைகள் கொட்டும் மழையில் நனைந்து வீணாவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை, ரயில்வே சாலையில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வைத்தால், நெல் மூட்டைகள் நாசமடையாமலும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version