மவுனம் கலைத்தார் தோனி… இப்போதைக்கு ஓய்வு இல்லை…

உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், தோனி ஓய்வு குறித்து அறிவிப்பார் என்று கூறப்பட்டு வந்தது. இதுதொடர்பாக பல்வேறு விதமான செய்திகளும் வெளியாகின. உலகக்கோப்பை தொடரில் தோனி சிறப்பாக செயல்படவில்லை என்றும், அவர் ஓய்வு குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் பல தரப்பினர் கூறி வந்தனர். அதே போல் தோனிக்கு ஆதரவாக, அவர் அணியில் இடம் பெற வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், பிசிசிஐ தோனியை ஓரம் கட்ட இருப்பதாகவும், அணியில் இனி அவருக்கு இடம் கிடைப்பது கடினம் என்றும் தகவல்கள் வெளியாகின.

தோனிக்கு ஆதரவாகவும், எதிராகவும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தன்னை பற்றி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தோனி. தனது அடுத்தகட்ட முடிவு குறித்து பிசிசிஐ-க்கு தகவல் அனுப்பியுள்ளார் தோனி. அதில், “தான் பாரா ரெகிமெட்ண்ட் படையில் இணைய இருப்பதால் அடுத்த 2 மாதங்களுக்கு தற்காலிகமாக அணியில் இடம்பெறமுடியாது” என்று தோனி கூறியுள்ளார்.

தோனி இவ்வாறு கூறியிருப்பதால், அவர் ஓய்வை பற்றி இதுவரை யோசிக்கவில்லை என்று தெரிகிறது. மேலும், வர இருக்கும் மேற்கு இந்திய அணிக்கெதிரான தொடரிலும் தோனி இடம் பெற மாட்டார் என உறுதியாகியுள்ளது. தோனியின் இந்த முடிவு குறித்து கேப்டன் கோலியிடம் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தோனி இதுவரை ஓய்வை அறிவிக்காதது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version