நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சமேத அபிராமி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த தருமபுர ஆதீன புதிய மடாதிபதிக்கு, நாதஸ்வரங்கள் முழங்க மல்லாரி இசைக்கச்சேரியுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தருமபுர ஆதீனத்தின் 27ஆவது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அண்மையில் பதவியேற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 27 கோவில்களுக்கு அவர் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அதன்படி, புகழ்பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சமேத அபிராமி அம்மன் கோவிலுக்குத் தருமபுர ஆதீனம் சென்றார். பாரம்பரிய முறைப்படி குதிரை வண்டியில் அவர் அழைத்து வரப்பட்டார். அப்போது, 54 நாதஸ்வர மேளங்கள் முழங்க மல்லாரி இசைக் கச்சேரியுடன், அவருக்குப் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார்.