ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்த துணை முதலமைச்சர்

தேனி மாவட்டம் போடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடங்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூதிப்புரத்தில் 38 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. இதனை திறந்து வைப்பதற்கு வருகை தந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

இதையடுத்து சமூதாயக் கூடத்தை அவர், ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். இதேபோல், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டடத்தையும் அவர் திறந்து வைத்தார்.

பின்னர், 14 பயனாளிகளுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளையும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தேனி MP ரவீந்திரநாத் குமார், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி பல்தேவ் மற்றும் கம்பம் MLA ஜக்கையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version