மத்திய அரசைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் -திருநாவுக்கரசர்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 2-ம் ஆண்டு நிறைவையொட்டி மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி, பயன்பாட்டில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து நாட்டு மக்களுக்கு பா.ஜ.க. அரசு அதிர்ச்சி அளித்ததாக அறிக்கையொன்றில் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டி உள்ளார். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக நாடு மிகப்பெரிய பேரழிவைச் சந்தித்து வருவதாகவும், பல்வேறு தொழில் நிறுவனங்கள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version