மாவட்ட ஆட்சியர்களிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த முடிவு

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படையால் 129 கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார். 280 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான 991 கிலோ தங்கமும், 611 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 79 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சாஹூ கூறினார்.

பதற்றமான வாக்கு சாவடிகளாக 7 ஆயிரத்து 225 என கண்டறியப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 பேர் என சாஹூ கூறினார். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இதில் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version