அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் இறந்த நிலையில் பிறந்த குழந்தை

அரியலூர் அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிக்கு உரிய நேரத்தில் மருத்துவம் பார்க்க தவறியதால், குழந்தை இறந்து பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் குன்னத்தை சேர்ந்த சமோசா மாஸ்டர் சேகரின் மனைவி மணிமேகலை. நிறைமாத கர்ப்பிணியான இவர், நேற்று பிரசவ வலியால் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், அவரை ஒரு முறை மட்டுமே மருத்துவர் பார்த்ததாகவும், பிரசவ வலி அதிகரித்தபோது செவிலியர்கள் கூட வந்து பார்க்கவில்லை என புகார் கூறப்படுகிறது.

மருத்துவர் மற்றும் செவிலியர்கள் யாரும் வந்து பார்க்காமல் அலட்சியம் காட்டியதால், மணிமேகலையின் குழந்தை இறந்த நிலையில் தானாக பிறந்து வெளியே வந்துள்ளது.

அதன் பிறகே செவிலியர்கள் வந்து பார்த்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இறந்த குழந்தையினை கட்டப்பையில் போட்டு அரசு செவிலியர்கள் கொடுத்துள்ளனர்.

திருமணமாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு பிறக்கும் குழந்தையை எதிர்பார்த்து ஆசையுடன் காத்திருந்த தந்தை சேகர், குழந்தை இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

Exit mobile version