உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் சிகிச்சை பலனின்றி மரணம்

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண், தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உன்னவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் 2 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த நபர், வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றம் சென்ற போது அவரை மீண்டும் கடத்திச் சென்றார்.

பின்னர், அந்த பெண் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உடலில் பெட்ரோல் ஊற்றி கொழுத்தப்பட்டார். இதில், 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண்ணுக்கு, லக்னோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து அவர், லக்னோவில் இருந்து மேல் சிகிச்சைக்காக டெல்லி கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி இளம் பெண் உயிரிழந்தார். மருத்துவமனையில், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த வாக்குமூலத்தின் படி, குற்றவாளிகள் 5 பேரில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Exit mobile version