ஆந்திராவில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை – தாழ்த்தப்பட்ட சமூக வாலிபரை காதலித்த மகள் கொன்று எரிப்பு

 

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாசம் மாவட்டம் நாகிரெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சைதன்யா. இவர், அதே பகுதியை சேர்ந்த ஆவுலைய்யா என்பவரின் மகள் இந்திராவை காதலித்து வந்தார்.

சைதன்யா ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் போனில் தொடர்பு கொண்டு பேசி பழகி வந்த நிலையில், இந்திராவின் தந்தைக்கு இவர்களின் காதல் தெரிய வந்ததால், தனது மகளை எச்சரித்து வந்தார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சைதன்யாவை காதலிப்பதை விட்டுவிட வேண்டும் எனவும், தான் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென இந்திராவை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

சைதன்யாவையே திருமணம் செய்து கொள்வேன் என இந்திரா கூறி வந்த நிலையில், தந்தை, மகளுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு இந்திராவை வீட்டிலேயே கொலை செய்த அவுலைய்யா, இன்று அதிகாலை கிராமத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உடலை எரித்துள்ளார். துர்நாற்றம் வீசியதையடுத்து, அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது, அவுலைய்யா இந்திராவை எரித்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, கொம்மரோலு போலீசார் ஆவுலைய்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Exit mobile version