தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்

தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு மாவட்டங்களில், தினசரி கொரோனா பாதிப்பு, தொடர்ந்து மற்ற மாவட்டங்களை விட அதிகமாக உள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 பேர் உட்பட, புதிதாக 10 ஆயிரத்து 448 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 335 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 849 பேர் ஆண்கள் என்றும், 4 ஆயிரத்து 599 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சென்னையில் மேலும் 689 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 759‬ ஆக உள்ளது.

அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் ஆயிரத்து 420 பேரும், ஈரோட்டில் ஆயிரத்து 123 பேரும், சேலத்தில் 693 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று, திருப்பூரில் 608 பேரும், செங்கல்பட்டில் 456 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

21 ஆயிரத்து 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 270 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 164 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 106 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

 

Exit mobile version