வீர மரணமடைந்த சிஆர்பிஎப் வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஜம்மு காஷ்மீரில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் சந்திரசேகரின் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், தென்காசி மாவட்டம் மேலூர் கிராமத்தை சேர்ந்த, மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் சந்திரசேகர் வீர மரணம் அடைந்த செய்தியை கேட்டு, மிகுந்த மனவேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதலமைச்சர், தேசத்திற்காக இன்னுயிரை தியாகம் செய்த சந்திரசேகரின் குடும்பத்தினருக்கு, 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் சந்திரசேகர் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு, அரசு வேலை வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

Exit mobile version