தனியாருக்கு சொந்தமான குளிர்பதன பழக்கிடங்கில் விபத்து

சென்னை ஆவடி அருகே பழக்கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய வட மாநில தொழிலாளியை 12 மணிநேரம் போராடி மீட்புக்குழுவினர் மீட்டனர்.

ஆவடி அருகே மேட்டுப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான குளிர்பதன பழக்கிடங்கில் பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இரும்பு ராக் சரிந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 தொழிலாளர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி, அம்பத்தூர் மற்றும் பூவிருந்தவல்லி தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் மீட்புப்படையினர் 3 தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பழக்கிடங்கில் 3 டிகிரி செல்சியஸ் குளிர் இருந்ததால், இரும்பு ராக்கில் சிக்கிய ஹயாத் என்ற அசாம் மாநில தொழிலாளியை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. 12 மணிநேரம் போராடி அந்த தொழிலாளியை மீட்புப்படையினர் மீட்டனர்.

இதனிடையே இந்த விபத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 18 டன் உயர்ரக ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் சேதமடைந்துள்ளன. விபத்து குளித்து பூவிருந்தவல்லி வட்டாட்சியர் புனிதவதி நேரில் விசாரணை மேற்கொண்டார்.

Exit mobile version