வனிதா, பீட்டர் பால் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

பீட்டர் பாலின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கில், நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் ஆகியோர் வரும் 23-ம் தேதி ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை வனிதா கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னிடம் விவாகரத்து பெறாமல், பீட்டர் பால் 2-வது திருமணம் செய்து கொண்டதாக வடபழநி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல காவல் ஆணையரிடமும் புகார் அளித்தார். புகார் மீது வழக்குப்பதிவு செய்த வடபழநி மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, நீதிமன்றத்திலும் ஹெலன் வழக்கு தொடர்ந்தார்.

அதில், பீட்டர் பால் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். வடபழநி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்த வேண்டுமென உத்தரவிடவும் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் ஹெலனுக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்தது என்பதற்கும், அந்த திருமணம் ரத்தாகவில்லை என்பதற்கு ஆதாரமும், முகாந்திரமும் இருப்பதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து வழக்கின் விசாரணையில், வரும் 23-ம் தேதி நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் ஆகியோர் நேரில் ஆஜராகும்படி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

 

Exit mobile version