களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்

நாளை மறுநாள் வெளியாகவிருந்த களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் சற்குணம் இயக்கி, தயாரித்துள்ள களவாணி 2 திரைப்படத்தில் நடிகர் விமல், ஓவியா, நடித்துள்ளனர். வரும் ஜூலை 5 ல் வெளியாகவிருந்த இப்படத்தின் இணை தயாரிப்பாளராக உள்ள ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இயக்குனர் சற்குணம் தன்னிடம் வாங்கிய 67 லட்சம் ரூபாயை வட்டியுடன் தரவில்லை என்றும், பணத்தை திருப்பி தரும்வரை படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதி மன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி , இயக்குனர் சற்குணம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த புதன் கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளார், அதுவரை களவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version