100% ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை ஒப்பீடு செய்ய கோரிய திமுக மனு தள்ளுபடி

வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை 100 சதவீதம் சரிபார்க்க கோரி திமுக தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சியினர் அவ்வப்போது சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இதனிடையே விவிபேட் என்னும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை 50 சதவீதம் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்பீட்டு பார்க்க வேண்டும் என வலியுறுத்தி 21 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் 100 சதவீத ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களையும் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்பீட்டு பார்க்க வேண்டும் எனக்கோரி, திமுக மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரே கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் மீண்டும் மனு தாக்கல் செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பியதுடன் மனுவை தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும், நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் திமுக வழக்கறிஞரை நீதிபதிகள் எச்சரித்தனர்.

 

 

Exit mobile version