கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 7 ஆயிரத்து 988 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1 லட்சத்து 98 ஆயிரத்து 513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோயான இந்த கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் குறித்து தற்போது காணலாம். சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. உலக அளவில், கொரோனாவின் தாயகமான சீனா, கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. சீனாவில் இதுவரை 80 ஆயிரத்து 894 பேர் பாதிக்கபட்டுள்ளதாகவும், வைரஸ் தாக்கத்திலிருந்து 69 ஆயிரத்து, 614 பேர் குணமடைந்துள்ளதாகவும் 3 ஆயிரத்து 237 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்த படியாக கொரோனாவால் இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 31 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளது. 2 ஆயிரத்து, 941 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 503 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் கொரோனாவால் 16 ஆயிரத்து 169 பேர் பாதிக்கபட்டுள்ளனர். 5 ஆயிரத்து, 389 பேர் குணமடைந்துள்ள நிலையில், 988 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால், 11 ஆயிரத்து 826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 28 பேர் குணமடைந்துள்ள நிலையில், 533 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜெர்மனியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 367 ஆக அதிகரித்துள்ளது. இதில், 67 பேர் குணமடைந்துள்ள நிலையில், 26 பேர் மரணம் அடைந்துள்ளனர். தென்கொரியாவில் 8 ஆயிரத்து 413 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர். ஆயிரத்து 540 பேர் குணமடைந்துள்ள போதிலும், 84 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பிரான்ஸில் 7 ஆயிரத்து 730 பேர் பாதிக்கபட்டுள்ளனர். 602 பேர் நோயின் தாக்கத்திலிருந்து குணமடைந்துள்ளனர். 175 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 514 ஆக அதிகரித்துள்ளது. 106 பேர் குணமடைந்துள்ள நிலையில், 115 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸின் தாக்கம் திடீரென அதிகரித்த ஸ்விட்ஸர்லாந்தில் 2 ஆயிரத்து 742 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் மட்டுமே குணமடைந்துள்ள நிலையில், 27 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 950 ஆக உள்ளது. 65 குணமடைந்துள்ள நிலையில், 71 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக நாடுகள் எடுத்து வரும் தீவிர நடவடிக்கை காரணமாக வைரஸின் தாக்கத்திலிருந்து மீண்டுள்ளவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது. இருந்த போதிலும் நோயின் தாக்கத்தை உணர்ந்து அனைத்து நாடுகளும் கடும் கட்டுப்பாட்டை விதித்து வருகின்றனர்.

Exit mobile version