கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் ஆய்வகம் – மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல்

கொரோனா வைரஸ் கண்டறியும் 4வது ஆய்வகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நெல்லையில் கொரோனா வைரஸ் கண்டறியும் 4வது ஆய்வகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுவரை 79 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், அதில் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அமைச்சர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கொரோனா பாதித்த, அந்த ஒரு நபருக்கு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அளித்த துல்லிய சிகிச்சையால் தற்போது குணமடைந்திருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். தொடர்ந்து, கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு தெளிவான தகவலை தமிழக சுகாதாரத்துறை அளிக்கும் எனவும் அமைச்சர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version