தமிழகத்தில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

தமிழகத்தில், மேலும் ஆயிரத்து 843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 504 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 843 பேரில், ஆயிரத்து 132 பேர் ஆண்கள், 710 பேர் பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 797 பேர் ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 344ஆக அதிகரித்துள்ளது. 54 புள்ளி 5 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 44 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. 20 ஆயிரத்து 678 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில், அதிகபட்சமாக ஆயிரத்து 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 244 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் புதிதாக 120 பேருக்கும், திருவள்ளூரில் 50 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 40 பேரும், திருவண்ணாமலையில் 33 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version