கொரோனா நோயாளிகள் குடிநீர் இன்றி தவிக்கும் அவலம்

கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் குடிநீர் இன்றி தவிக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அரசு மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில், ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதால், நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், கொரோனா வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, மருத்துவமனை நிர்வாகம் குடிநீர் வசதி கூட செய்து தரவில்லை என நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகள் வெளியே சென்று தண்ணீர் குடிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டுமென நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போல் சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் குடிநீர் மற்றும் கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லாததால் நோயாளிகள் மட்டுமல்லாது அவர்களது உறவினர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவமனை நிர்வாகம் வேண்டுமென்றே அலைக்கழிப்பதாகவும் நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ள்னர். இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version