தமிழகத்தில் இன்று மேலும் 5,996 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 996 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 9 ஆயிரத்து 238 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்து 996 பேரில் 3 ஆயிரத்து 543 ஆண்களுக்கும், 2 ஆயிரத்து 453 பெண்களுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

தலைநகர் சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 869 ஆக உயர்ந்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் 496 பேருக்கும், சேலத்தில் 437 பேருக்கும் நோய் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் 298 பேருக்கும், செங்கல்பட்டு 296 பேருக்கும், கடலூரில் 256 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஒரேநாளில் 5 ஆயிரத்து 752 பேர் குணமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 49 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம், 85 புள்ளி 44 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் மேலும் 102 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 50 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 52 ஆயிரத்து 506 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version