ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று

மலேசியாவில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த இருவர் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு, ஒமிக்ரான் தொற்று இருக்குமோ? என்ற அச்சத்தில், 8 பேரின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 20ம் தேதி மலேசியாவில் இருந்து 7 வயது சிறுமியுடன் கணவன், மனைவி ஆகிய இருவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வந்தனர்.

அங்கு, பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த 3 பேருக்கும் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, வீட்டில் இருந்த 9 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், 7 வயது சிறுமியை தவிர மற்ற 8 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று தீவிர பாதிப்பில் இருந்த 2 பேர் தூத்துக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 6 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 8 பேருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் உள்பட 33 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

வெளிநாட்டில் இருந்து வரும்போது எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகடிவ் என்று வந்த நிலையில், இந்தியா வந்த பின்னர் இருவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஒமிக்ரான் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் 8 பேரின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version