கோவை, ஈரோடு மாவட்டங்களில் கட்டுக்கடங்காத கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு மாவட்டங்களில், தினசரி கொரோனா பாதிப்பு மற்ற மாவட்டங்களை விட அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 பேர் உட்பட, புதிதாக 12 ஆயிரத்து 772 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 884 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 245 பேர் ஆண்கள் என்றும், 5 ஆயிரத்து 527 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சென்னையில் மேலும் 828 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11ஆயிரத்து 944 ஆக உள்ளது.

அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் ஆயிரத்து 728 பேரும், ஈரோட்டில் ஆயிரத்து 295 பேரும், சேலத்தில் 796 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று, திருப்பூரில் 781 பேரும், தஞ்சாவூரில் 596 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

25 ஆயிரத்து 561 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 254 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 146 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 108 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
—————

Exit mobile version