தமிழகத்தில் மேலும் 5,990 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 990 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 39 ஆயிரத்து 959ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்து 990 பேரில், 3 ஆயிரத்து 465 பேர் ஆண்கள், 2 ஆயிரத்து 525 பேர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் ஒரேநாளில் ஆயிரத்து 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 732 ஆக உயர்ந்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் 579 பேருக்கும், செங்கல்பட்டில் 390 பேருக்கும், சேலத்தில் 403 பேருக்கும் நோய் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 285 பேருக்கும், கடலூரில் 405 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 5 ஆயிரத்து 891 பேர் குணமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 63 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம், 86 புள்ளி 39 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், 98 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 52 ஆயிரத்து 380 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version