மதுரை ஆட்சியர் தலைமையில் ஜல்லிக்கட்டு குறித்த ஆலோசனை கூட்டம்

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 15, 16, 17ஆம் தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு நடக்கும் திடலில் 8 அடி உயரத்தில் இரண்டு அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் எனவும், திடல் முழுதும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும் எனவும் ஆட்சியர் நடராஜன் குறிப்பிட்டார். கடந்த ஆண்டை விட போட்டிக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று கூறினார்.

Exit mobile version