ஜெட் வேகத்தில் கட்டுமான பொருட்கள் விலையேற்றம் – ஏழைகளின் வீடு கட்டும் கனவு நிறைவேறுமா?

கட்டுமானப் பொருட்கள் விலை திடீரென வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் வீடு கட்டும் கனவில் இருந்த ஏழை முதல் அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி விற்கும் ரியஸ் எஸ்டேட் தொழிலதிபர்கள் வரை கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்…

2023ம் ஆண்டுக்குள் குடிசைகளில்லா தமிழகம் என்பதே முந்தைய அதிமுக அரசின் பிரதான இலக்கு. இதற்காக புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு மத்திய மாநில அரசின் திட்டங்களின் கீழ் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டன. மானியத்துடன் கூடிய வங்கிக்கடன், குறைந்த விலையில் கட்டுமானப் பொருட்கள் என சலுகைகள் வழங்கப்பட்டதால், ஏழைகளின் வீடு கட்டும் கனவு எளிதில் நனவானது. தங்களாலும் வீடுகட்ட முடியும் என்ற நம்பிக்கையும் அடித்தட்டு மக்களிடையே ஏற்பட்டது.

ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை கண்மூடித்தனமாக உயர்ந்துள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட் விலை 370 ரூபாயிலிருந்து 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு யூனிட் எம் சாண்டின் விலை ஐந்தாயிரம் ரூபாயில் இருந்து ஆறாயிரம் ரூபாயாகவும், ஒரு யூனிட் ஜல்லி 3ஆயிரத்து600 ரூபாயிலிருந்து 4ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. ஒரு லோடு செங்கலின் விலை 18 ஆயிரம் ரூபாயிலிருந்து 24 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது

கட்டுமானப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் விலையை உயர்த்தாத நிலையில் சில்லறை விற்பனையில் ஈடுபடும் வணிகர்கள் விலையை உயர்த்தியுள்ளனர். இந்த விலை உயர்வால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்

கொரோனா சமயத்தில் ஏராளமான தொழில்கள் நசிந்த நிலையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் ஒரு துறையாக இத்துறை திகழ்ந்தது. இந்த சூழலில் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்

கொரோனா காலத்தில் ஏற்கனவே வேலைவாய்ப்பு குறைந்துள்ள நிலையில், கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாராத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

Exit mobile version