சொந்தக் கட்சி வேட்பாளர் இறப்பைப் புறக்கணித்த காங்கிரஸ் கட்சி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவ ராவ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில், அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாதவராவ் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாதவராவ், சிகிச்சை பலனின்றி கடந்த 11ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, முன்னாள் மக்களவை உறுப்பினர் அழகிரிசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் அவரது உடல் காதிபோர்டு காலனியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே, மறைந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் இறுதிச் சடங்கில், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் பங்கேற்ற நிலையில், காங்கிரசார் பங்கேற்காமல் புறக்கணித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சிவகாசி காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் உள்ளிட்ட அனைவரும் மாதவராவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், கட்சி பேதமில்லாமல் கலந்து கொண்ட போது, காங்கிரசார் கலந்து கொள்ளாதது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Exit mobile version