திமுகவினரை ஆவேசமாக திட்டிவிட்டு வெளியேறிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி

கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை, திமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம், திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் வேட்பாளரை இறுதி செய்வதற்கு வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கலந்து கொண்டார். ஆனால் எம்.பி. ஜோதிமணியிடம் கலந்து கொள்ளாமல் அவர்களாகவே தொகுதி பங்கீடு குறித்து பேசிக் கொண்டதால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி திமுகவினரிடம் முறையிட்டுள்ளார்.

அப்போது, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க நீ யார் வெளியே போ என்று அங்குள்ள திமுகவினர் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து திமுகவினரை ஆவேசமாக திட்டிவிட்டு வெளியேறிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, பேச்சவார்த்தையின்போது,
திமுகவினர் வெளியேற சொன்னதாக குற்றம்சாட்டினார்.

பேச்சுவார்த்தைக்கு வந்த கூட்டணி கட்சியினரை வெளியே போகச் சொன்னது கூட்டணி தர்மமா என்றும் அவர் ஆவேசத்துடன் கூறிவிட்டு வெளியேறினார்.

பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை வெளியே போகச் சொன்னதாக, திமுக அலுவலகம் முன்பு ஆவேசத்துடன் ஜோதிமணி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version