உபியில் தனித்து போட்டியிட தயாராகிறது காங்கிரஸ்

உத்திர பிரதேசத்தில் தனித்து போட்டியிட காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான மாநில கட்சிகளுடன் கூட்டணி வைக்க அக்கட்சி முயன்று வருகிறது. உத்திர பிரதேசத்தில் அக்கட்சி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடனும் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால் மாயாவதியும் அகிலேசும் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க மறுத்து வருகிறார்கள். அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 37 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன.இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து பேசிய அகிலேஷ் யாதவ் , “காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள்தான் கொடுப்போம்” என கூறியுள்ளார்.

இந்நிலையில், உ.பி.யில் தனியாக போட்டியிட தயாராக இருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜீவ் பாக் ஷி கூறியுள்ளார். அகிலேஷ் யாதவும் மாயாவதியும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கின்றனர்.அதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளனர்.

Exit mobile version