கள்ளக்காதலில் மோதல்- ஆட்டோ ஓட்டுநருக்கு சரமாரி வெட்டு

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர், எம்ஜிஆர் நகர், முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 34 வயதான கோபால கிருஷ்ணன். ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 11-ம் தேதி தனது வீட்டின் முன்பு நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், கண் இமைக்கும் நேரத்தில் கத்தியால் சரமாரியாக கோபாலை வெட்டியுள்ளனர்.

இதில் கோபாலுக்கு நான்கு விரல்கள் துண்டானதுடன், தலையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேலையூர் போலீசார், வழக்கு பதிவு செய்து, கொலை முயற்சி சம்பவம் நடந்த இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைபற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலையாளிகள் அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர், மார்ட்டின், ரஞ்சித்குமார் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில், கைது செய்யப்பட்ட ராஜேஷ், மீனா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததும், அதே பெண்ணுடன் கோபாலாகிருஷ்ணனும் தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்த ராஜசேகர், கோபாலை அரிவாளால் வெட்டியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

Exit mobile version