11, 12-ம் வகுப்பு பாடத்திட்டங்களை குறைக்கும் பணி நிறைவு – பள்ளிக்கல்வித்துறை!

கொரோனா காரணமாக கடந்த ஆறு மாத காலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கும்போது, மாணவர்களுக்கு பாடச் சுமை அதிகமாக இருக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழக அரசின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களின் பாடத்திட்டங்களை குறைக்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை செய்திருக்கிறது. ஏற்கனவே பத்தாம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை 40 சதத்திற்கும் மேல் குறைக்கும் பணி நிறைவடைந்து இருக்கிறது.

இந்தநிலையில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை குறைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்திருக்கிறது. இதனால் மாணவர்கள் பள்ளிகள் திறந்த பிறகு குறைவான நாட்களில் குறைவான பாடத் திட்டங்களை மட்டுமே படித்தால் போதும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எற்கனவே கொடுக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்களில் பாடத்திட்டங்களை குறைக்கும் நடவடிக்கையை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பாடத்திட்டக் குறைப்பு நிபுணர் குழு செய்திருக்கிறது. எனவே பள்ளிகள் திறந்த பிறகு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்த ப்ளூ பிரிண்ட் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படும். அதனை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு பாடங்களை நடத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version