ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணம்: கனிமொழி மீது அதிமுக சார்பில் புகார்

தேர்தல் பிரசாரத்தின் போது தன்னை ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி இரைக்கும் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழியும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனும் தேர்தல் பிரசாரத்தின் போது தங்களை ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி
வாக்காளர்களுக்கு பணம் அளிப்பது குற்றமாகும் என குறிப்பிட்டுள்ளது. விதிமுறைகளுக்கு எதிரானது எனவும் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்ட கனிமொழியின் நாடாளுமன்ற வேட்புமனுவை நிராகரிக்க, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

Exit mobile version