திருப்பரங்குன்றத்தில் அமமுக கூட்டத்தில் தேர்தல் விதிமீறல் புகார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் விதிமீறல் செய்த அமமுகவினர்மீது போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தலையொட்டி அமமுக வேட்பாளர் மகேந்திரனை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்மண்டல பொறுப்பாளரும் அமமுக கொள்கை பரப்பு செயலாளருமான தங்கத் தமிழ்செல்வன் கலந்து கொண்டார். கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 200க்கும் மேற்பட்ட கார்கள், 50 டாடா ஏஸ் வாகனங்களில் ஆட்கள் அழைத்துவரப்பட்டனர்.

இதனால் திருப்பரங்குன்றம் பெரியரத வீதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போக்குவரத்தை சீரமைக்க காவல்துறையினர் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் தேர்தல் விதியை மீறி கூட்டம் நடைபெறும் இடத்தின் வெளியில் அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அமமுகவினர்மீது 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Exit mobile version