அரசுப் பள்ளிகளில் விலையில்லா பாடநூல்கள் வழங்கும் பணி தொடக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கும் பணி இன்று தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயில்கின்ற 2, 3, 4, 5 மற்றும் 7, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை ஆகஸ்ட் 3ம் தேதி முதல் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றும், முதலில் ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, புத்தகங்கள் வழங்கும் பணி இன்று தொடங்கியது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒரு மணிநேரத்திற்கு 20 மாணவர்கள் வீதம் சமூக இடைவெளி விட்டு நிற்க வைத்து புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்படுகின்றன. இதனையொட்டி, பள்ளி வளாகங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு தூய்மையாக வைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version