மேட்டுப்பாளையத்தில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடக்கம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கோயில் யானைகளுக்கான 48 நாள் புத்துணர்வு முகாம் இன்று தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் புத்துணர்வு முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான யானைகள் புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் உள்ள பவானி ஆற்றுப்படுகையில் இன்று தொடங்கியது.

யானைகள் புத்துணர்வு முகாமை, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி தொடங்கி வைத்தார். 48 நாட்கள் நடைபெறும் முகாமில் 28 யானைகள் கலந்து கொண்டுள்ளன. 6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள முகாமில், பாகன்கள் தங்குமிடம், ஓய்வு அறை என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை நிலையம், யானைகள் நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. யானைகளுக்கு ஊட்டசத்து உணவு வழங்கப்படுவதுடன், நடைப்பயிற்சி, மருத்துவ பரிசோதனை முகாமில் நடத்தப்படுகிறது. கோயில் யானைகள் குளித்து மகிழ ஷவர் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. காட்டு யானைகள் வராமல் இருக்க மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. முகாமிற்கு பிறகு கோயில் யானைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடன் திரும்பு என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவித்தார்.

Exit mobile version