மக்களவை தேர்தலையொட்டி விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை

மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பிறந்தநாள் விழா குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மனம் திருந்தி வந்தால் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்தார். தேசிய கட்சிகளுடனும் மாநில கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நல்ல முடிவு எட்டியவுடன் விரைவில் கூட்டணி குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version