ரூ.1106 கோடி மதிப்பிலான புதிய நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

 ஆயிரத்து 106 கோடி மதிப்பிலான புதிய நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

ஆரணி முதல் விழுப்புரம் வரையிலான சாலை 425 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது. இந்த சாலையை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த சாலை வழித்தடத்தில் 35 பேருந்து நிறுத்தங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் 15 பேருந்து நிறுத்தங்களில் சூரிய சக்தி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. வழி நெடுகிலும் 36 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டம் திருவாணைக்காவலில் 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படுள்ள ரயில்வே மேம்பாலத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

26 கோடியே 75 லட்சம் மதிப்பில், விருதுநகர் துலுக்கம்பட்டியில் ரயில்வே மேம்பாலம், 26 கோடியே 40 லட்சம் மதிப்பில் திண்டுக்கல் டவுனில் ரயில் நிலைய பணிமனை மேம்பாலம் உள்ளிட்ட 17 பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்,தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னை ஆவடி பருத்திப்பட்டு ஏரியின் சூழலை மீட்டெடுக்கும் பொருட்டு 28 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இங்கு 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபாதை, திறந்தவெளி அரங்கம், படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆட்ரம்பாக்கம் கிராமத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, 14 கோடியே 60 லட்சம் மதிப்பில் கடலூர் மாவட்டம் வீசூர், பெரியகாட்டுப்பாளையம் ஓடைகள் சீரமைப்பு திட்டம், 22 கோடியே 50 லட்சம் செலவில் வீசூர் முதல் தேவனாம்பட்டினம் வரையில் கெடிலம் ஆற்றினை வலுப்படுத்தும் திட்டம் போன்றவற்றையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 25 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, சிவகங்கை மாவட்டம் எஸ்.ஆர் பட்டணம் கண்மாய் மற்றும் இதர கண்மாய்களுக்கு பாசன வசதி அளிக்கும் விதமாக மணிமுத்தாற்றின் குறுக்கே 6 கோடியே 81 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு, கன்னியாகுமரி மாவட்டம் மண்டைகாடுபுதூரில் 7 கோடியே 82 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தூண்டில் வளைவு உள்ளிட்ட திட்டங்களையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

சென்னை சைதாப்பேட்டை தாண்டர் நகரில் ஏ மற்றும் பி பிரிவு அரசு அலுவலர்களுக்காக 76 கோடியே 39 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வேளாண் துறை சார்பில் திருப்பூர் மாவட்டம் பெதம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 12கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கினை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். திருவண்ணாமலை, திருச்சி , நெல்லை , தூத்துக்குடி , திருப்பூர், ஈரோடு, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 42 கோடியே 40 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 14 சேமிப்புக் கிடங்குகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தருமபுரி, அரூர் ஆகிய இடங்களில் 7 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பதப்படுத்தும் கட்டடத்துடன் கூடிய அலுவலகங்கள், நீலகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் 11 இடங்களில் கட்டப்பட்டுள்ள குளிர்பதன கிடங்குகள் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர், தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டை ஆகிய இடங்களில் 20 கோடியே 54 லட்சம் செலவில் கல்விசார் கட்டடங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் 2கோடியே 44 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3ம் தலைமுறை உயர் வேளாண்மை தொழில்நுட்ப கட்டடம் உள்பட பல்வேறு வேளாண்மை திட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மேலும் பேச்சிப்பாறை தோட்டக்கலை கல்வி நிலையத்தில் 5 கோடியே 22 லட்சம் செலவில் கல்வி கட்டடங்கள்,கோவை வேளாண்மை கல்லூரியில் 10 கோடியே 75 லட்சம் செலவில் உயர் தொழில் நுட்ப கட்டடத்திற்கு முதலமைச்ச்சர் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி,புதுக்கோட்டை தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையம், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளான் கல்லூரி உள்ளிட்ட வேளான் கல்வி நிறுனங்களில் 70 கோடியே 47 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான கட்டடங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்,வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்

 

Exit mobile version