“இந்த தேர்தல் திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும்” – முதலமைச்சர் பழனிசாமி!

கருணாநிதி ஆட்சியில் அவர்கள் குடும்பம் மட்டும்தான் பிழைத்தது என்றும், திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அமையட்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இன்றும் நாளையும், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக விமானம் மூலமாக முதலமைச்சர், நேற்று சென்னையில் இருந்து மதுரை சென்றார். அப்போது பெருங்குடியில் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொதுமக்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அனைத்து திட்டங்களையும் சிந்தாமல், சிதறாமல் மக்களுக்கு அளித்து வருவதாகக் கூறினார். ஸ்டாலின் வீணாக அவதூறு பரப்பி வருவதாகக் குற்றம்சாட்டிய முதலமைச்சர், திமுக ஒருபோதும் ஏழைகளுக்கான ஆட்சியை நடத்தவில்லை என்றும் சாடினார். தற்போது ஸ்டாலினின் மகன் அரசியலுக்கு வந்துள்ளதை போல, நாளை அவரது பேரனும் அரசியலுக்கு வருவார் என்றும், சாதாரண தொண்டன் ஒருபோதும் திமுகவில் அதிகாரத்திற்கு வர முடியாது என்றும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

Exit mobile version