ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி ; பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் நன்றி

அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மலேரியாவை குணப்படுத்தும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய பிரதமர் நரேந்திர மோடி அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில் மோடியின் உதவிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நெருக்கடியான சூழலில் நட்பு நாடுகளுக்கு இடையே இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்றும், ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்க அனுமதித்த இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த உதவியை ஒரு போதும் மறக்க மாட்டேன் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Exit mobile version