பொள்ளாச்சி விவகாரம் : திமுக மாவட்ட செயலாளர் மகனுக்கு சிபிசிஐடி சம்மன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரத்தில் திமுக மாவட்ட செயலாளர் மகன் மணிமாறன் நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து திருநாவுக்கரசை காவலில் எடுத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கடந்த வாரத்தில் காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதுபோல பலரிடம் சிபிசிஐடியினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில், பொள்ளாச்சி திமுக மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறன், வரும் 28ம் தேதி ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். திருநாவுக்கரசுவிடம் மணிமாறன் மிகவும் நெருக்கமாக பழகிவந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல, பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள பார் நாகராஜூக்கும் வரும் 28ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Exit mobile version